பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்தி வெள்ளிக்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சாந்தாவிடம், சாந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். திருச்சி மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த கனகசபை மனைவி சாந்தி (34). இவர் கட்சியின் ஒன்றிய மகளிரணி பாசறை செயலராகப் பொறுப்பு வகித்து வருகிறார். எம்.ஏ.பி.எட் படித்துள்ள இவர், தன்னிடம் 10 பவுன் நகை, ரூ.36 ஆயிரம் ரொக்கம் இருப்பதாக சொத்து விவரத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலர் ப. அருள் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர் சாந்தி மாலை அணிவித்தார்.
தொடர்ந்து, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக சென்ற ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பச்சை நிற வேட்டி, துண்டு அணிந்து விவசாயிகளைபோல் சென்றனர்.