சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை இழிவுபடுத்தி பேசியதாக, பேராயர் எஸ்றா.சற்குணம் மீது தொடரப்பட்ட வழக்கில், வரும் 10 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
பொன்பரப்பியில் நிகழ்ந்த பிரச்னைக்காக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 24 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேராயர் எஸ்றா. சற்குணம் பேசியபோது, வன்னியர் சமுதாய மக்களையும், பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரையும் இழிவுபடுத்தி பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பேராயர் எஸ்றா.சற்குணத்திற்கு சம்மன் அனுப்பி சட்டப்படியான விசாரணை நடத்தி தண்டனை வழங்கவும், மன உளைச்சலுக்கும், அவமானத்திற்கும் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் பாமக மாநில நிர்வாகி வழக்குரைஞர் தங்கதுரை, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி அசோக்பிரசாத், வழக்கு விசாரணைக்கு 6 ஆம் தேதி பேராயர் எஸ்றா. சற்குணம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், அவர் திங்கள்கிழமை ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை மே 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.