பெரம்பலூர் அருகே கணவன் திட்டியதால் மனமுடைந்த மனைவி ஞாயிற்றுக்கிழமை இரவு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். வரதட்சிணை கொடுமையால் அப்பெண் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெரம்பலூர் அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமம், ஏழு தென்னைமரத் தெருவைச் சேர்ந்த நீலமோகனின் மனைவி நந்தினி (23) இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது.
மனைவி நந்தினியின் நடத்தையில் சந்தேகமடைந்த நீலமோகன், அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நீலமோகன், மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நந்தினி, அவர்களது வீட்டின் அருகேயுள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நந்தினியின் தந்தை சந்திரசேகர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வரதட்சிணை கொடுமையால் நந்தினி தற்கொலை செய்துகொண்டாரா என, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.