பெரம்பலூர் அருகேயுள்ள அரணாரை மாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுக்கும் வைபவம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட அரணாரை மாரியம்மன் கோயிலில் கடந்த சில நாள்களாக சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு முயல் வேட்டை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து, திங்கள்கிழமை காலை முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி, பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர், மாவிளக்கு, பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (மே 14) காலை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருவிழாக் குழுவினரும், கிராம பொதுமக்களும் செய்துள்ளனர்.