பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆலத்தூர் வட்டம், தெரணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் தனபால் (35), ஓட்டுநர். ஆலத்தூர் கேட் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாசிமலை மகன் சித்ரகுமார்(48). இவர், பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மோட்டார்ஸில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சித்ரகுமார் செவ்வாய்க்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு ஆலத்தூர்கேட் காலனியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது ஆலத்தூர் கேட் அருகே சாலையில் ஒரு புறமிருந்து மறுபுறம் சாலையை கடந்து சென்ற போது எதிரெதிரே வந்த சித்ரகுமார் - தனபால் ஆகியோரது மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.