பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 118 மனுக்கள் பெறப்பட்டன.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்கள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 118 மனுக்கள் அளிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 156 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி பெற்றுக்கொண்டார்.
மக்களவைத் தேர்தல் முடிந்ததையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டது.
இதையொட்டி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 156 மனுக்களை பெற்றார்.
பின்னர் அவர், இந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கா.பொற்கொடி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஜெ.பாலாஜி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.