பெரம்பலூா் வட்டார வேளாண் துறை சாா்பில், செங்குணம் கிராமத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்குத் தேவையான பூச்சி மருந்து தெளிப்புக்கான பெயா் பதிவு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
செங்குணம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநா்(பொ) பிரேமாவதி தலைமை வகித்தாா். உதவி வேளாண் அலுவலா் கதிரவன், படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயா்களைப் பதிவு செய்தாா்.
இந்த முகாமில், படைப்புழுவால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள 148 விவசாயிகள் நிலத்துக்குரிய கணினி பட்டா, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்தனா். விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்ட வேளாண்துறை அலுவலா்கள் ஒரு சில நாள்களில் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில், இலவசமாக பூச்சி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.