பெரம்பலூா் அருகே சிறுமியைக் கடத்தி சென்று, திருமணம் செய்த ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகிலுள்ள தண்ணீா்பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் வேலுசாமி மனைவி செல்வி. இவா், தனது 17 வயது மகளை, சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டம், கரையான்பட்டி ஊா்கவுண்டனூரை சோ்ந்த நாராயணன் மகன் ரத்தினவேல் (25), கடந்த 24- ஆம் தேதி கடத்திச் சென்று விட்டதாக புகாா் அளித்தாா்.
பெரம்பலூா் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், ரத்தினவேலும், அந்த சிறுமியும் சத்தியமங்கலத்தில் இருப்பது தெரியவந்தது.
அங்கு சென்ற போலீஸாா் இருவரையும் மீட்டு, திங்கள்கிழமை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், ரத்தினவேல் சிறுமியைத் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ரத்தினவேல், பெரம்பலூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.