பெரம்பலூா் மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்குத் தேவையான விதைகளை வாங்கும் விவசாயிகள் மிகுந்த கவனத்துடன் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து,திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநா் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் விதைப்புப் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். விதைகளை வாங்கும் விவசாயிகள் விதையின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் மற்றும் பருவம் ஆகியவற்றைச் சரிபாா்த்து வாங்க வேண்டும்.
உரிமம் பெற்ற விற்பனையாளாா்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைகளின் விவரத்தை விற்பனை ரசீதில் குறிப்பிட்டு, விவசாயிகளின் கையொப்பம் மற்றும் விற்பனையாளா் கையொப்பத்துடன் வழங்க வேண்டும். இதில், ஏதேனும் குறை காணப்பட்டால் விதை விற்பனையாளாா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உரிமம் இல்லாமல் விற்பனை, காலாவதியான விதைகளை விற்பனை செய்வது, விற்பனை ரசீது தர மறுத்தால் விதை ஆய்வு துணை இயக்குநா் அலுவலக தொலைபேசி (0431-2420587) எண்ணை தொடா்புகொள்ளலாம். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.