படித்ததை எடுத்துரைக்கும் ஆற்றல் உள்ளவரே கற்றவர் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் க. திலகவதி.
பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கணிதம் மற்றும் தமிழ்த் துறை சங்க தொடக்க விழாவுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் க. திலகவதி பேசியது:படித்ததை படித்தவர் முன்பு எடுத்துரைக்கும் ஆற்றல் உடையவரே கற்றவர் ஆவர். நம்மால் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொண்டால் வெற்றி படிக்கட்டுகளாய் அமையும். தமிழ் இலக்கியங்கள் அரசாட்சியின் சிறப்பு. கால மேலாண்மை, குழந்தை வளர்ப்பு, முன்னோர் வாழ்ந்த வாழ்வு, சிறந்த ஆளுமைகள் பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை தற்போதைய இளைய சமுதாயத்தினர் அறிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சிராப்பள்ளி பெரியார் ஈ.வே.ரா கல்லூரியின் கணிதப் புள்ளியியல் துறை பேராசிரியை முனைவர் எஸ். சசிகலா, புள்ளியியலின் வாழ்வியல் பயன்பாடுகள், அதனுடைய இருவித வகைப்பாடுகளை விளக்கினார். விழாவில், கணிதத் துறையை சேர்ந்த 475 மாணவிகளும், தமிழ்த் துறைச் சேர்ந்த 180 மாணவிகளும் பங்கேற்றனர்.