பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. தொடர் மின் தடையால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் செவ்வாய்க்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், புதன்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து, சாலையோரங்களிலும், கால்வாய்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர், குளிர்காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மின்தடை: செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழையால் ஒருசில பகுதிகளில் 9 மணி முதல் 11 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டிருந்ததால் நகர மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
பல இடங்களில் புதன்கிழமை காலை 10 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, நகரின் பெரும்பாலான இடங்களில் புதன்கிழமை காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டிருந்தது.
பின்னர், மாலை 6 மணிக்கு தடை செய்யப்பட்ட மின்சாரம் இரவு 8.30 மணிக்கு விநியோகம் செய்யப்பட்டது.
கடந்த 2 நாள்களாக தொடர்ந்து மின் விநியோகம் தடை செய்யப்பட்டதால் வியாபாரிகளும், பொதுமக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். பெரம்பலூர் நகரின் பிரதான சாலைகளும், குடியிருப்பு பகுதிகளும் இருளில் மூழ்கின.