பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 697 வழக்குளுக்கு ரூ. 1.68 கோடி மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எஸ். மலர்விழி தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜி. கருணாநிதி முன்னிலை வகித்தார்.
தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ். கிரி, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான எம். வினோதா, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவர்கள் அசோக்பிரசாத், ப. கருப்பசாமி, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி டி. செந்தில்ராஜன் ஆகியோர் கொண்ட அமர்வானது, நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டு அதற்கான ஆணைகளை வழங்கினர்.
இதில், வங்கி வராக்கடன் வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, சிவில் வழக்கு, சிறு குற்ற வழக்கு, நிலம் கையகப்படுத்தும் வழக்கு, காசோலை மோசடி வழக்கு உள்ளிட்ட 679 வழக்குகளுக்கு ரூ. 1.68 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
இதில், வழக்குரைஞர் சங்க செயலர் சுந்தரராஜன், அட்வகேட்ஸ் அசோசியேசன் சங்க செயலர் இளவரசன், வழக்குரைஞர்கள் செந்தாமரைக்கண்ணன், முகமது இலியாஸ், ஆர். மணிவண்ணன், ஏ. அருணன் உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் வெள்ளைச்சாமி தலைமையிலான அலுவலர்கள் செய்திருந்தனர்.