பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சட்ட விரோதமாக செயல்பட்ட 30 மது அருந்தும் கூடங்களுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உதவி மேலாளர் (சில்லரை விற்பனை) தமிழரசன், கலால் ஆய்வாளர் ஜெயா தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் போலீஸார் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெரம்பலூர், எசனை, வேப்பந்தட்டை, வாலிகண்டபுரம், கிருஷ்ணாபுரம், தழுதாழை, தொண்டாமாந்துறை, பூலாம்பாடி, கை.களத்தூர், வி.களத்தூர் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி 12 இடங்களில் மது அருந்தும் கூடங்கள் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதேபோல், அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராமச்சந்திரன், உதவி கணக்கு அலுவலர் கார்த்திக் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மற்றும்கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் பெரியய்யா, உதவி ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் போலீஸார் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அரியலூர், திருமானூர், கயர்லாபாத், முடிக்கொண்டான் ஆகிய பகுதிகளில் 14 இடங்களில் அனுமதியின்றி மது அருந்தும் கூடங்களும்,4 பெட்டிகடைகளில் மதுக்கூடங்கள் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பகுதிக்குள்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, 30 பேர் மீது வழக்குப்பதிந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.