பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவிகித மானியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், 2019- 20 ஆம் ஆண்டில் 20 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட உள்ளன.
பண்ணைக் குட்டையை நீர் ஆதாரமாக கொண்டு தெளிப்புநீர் பாசன அமைப்பை நிறுவி, பயிர்களுக்கு சிக்கனமான முறையில் நீர் பாய்ச்சுவதன் மூலம் கூடுதலான பாசன வசதியை ஏற்படுத்திக்கொள்வதோடு, மீன்கள் வளர்த்து கூடுதல் வருமானத்தையும் பெறலாம்.
30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் மற்றும் 2 மீட்டர் ஆழம்கொண்ட பண்ணைக்குட்டை அமைப்பதற்கு ரூ. 1 லட்சம் செலவாகிறது.
இப்பண்ணைக் குட்டைகள் 100 சதவிகித மானியத்துடன் அரசு செலவில் விவசாயிகளுக்கு அமைத்துக் கொடுக்கப்படுகிறது.
பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது எளம்பலூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் (செல்லிடப்பேசி எண் 9994036266) ஆகியவற்றில் தங்களது பட்டா நகல், அடங்கல் மற்றும் புல வரைபட நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.