பெரம்பலூர் நகரில் என்.எல்.சி. பொறியாளர் வீட்டில் 36 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் ரோவர் நகரைச் சேர்ந்த தங்கராசு மகன் சுரேஷ்குமார் (29). இவர், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 12-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, தனது தாயார் கிருஷ்ணகுமாரியுடன் நெய்வேலிக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை பெரம்பலூர் வீட்டுக்கு சுரேஷ்குமார் வந்தார். அப்போது வீட்டின் ஜன்னல் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், வீட்டுக்குள் சென்று பார்த்த போது, ஜன்னல் கம்பிகளை அகற்றி, அதன் வழியாக வீட்டுக்குள் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 36 பவுன் நகைகள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருள்களைத் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார், அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான கைரேகை, தடயங்களையும் பதிவு செய்தனர்.
இதுகுறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.