பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சியில் ரூ. 2.77 கோடி மதிப்பில் கசடு கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குரும்பலூர் பேரூராட்சியில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், செப்டிக் டேங்க் கழிவுகளைக் கொண்டு உரமாக்கும் மையம் அமைப்பது, மையத்துக்கு செல்லும் சாலை அமைப்பதற்காக கிராமப்புற சாலைகள் கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ. 2.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்மூலம், குரும்பலூர் பேரூராட்சியில் திருப்பெயர் செல்லும் சாலையில் உரமாக்கும் மையம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளுக்கான பூமி பூஜையை பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
தமிழகத்தில் ஏற்கெனவே இத்திட்டம் கருங்குழி பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்டது. அதையடுத்து, 2- ஆம் கட்டமாக குரும்பலூர் பேரூராட்சி உள்பட 11 பேரூராட்சிகளில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இப்பணி ஓராண்டில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இந்த மையத்தின் மூலம் தயாரிக்கப்படும் உரம் விவசாயம் மற்றும் மரக்கன்றுகள் வளர்க்க பயன்படுத்தலாம் என பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
நிகழ்வில் திருச்சி மண்டலச் செயற்பொறியாளர் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் கிருஷ்ணன், உதவிப் பொறியாளர் உதயக்குமார், பணி மேற்பார்வையாளர் சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.