பெரம்பலூர் அருகே கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் நகரில் அதிகளவில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பெரம்பலூர் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் அழகேசன் தலைமையிலான போலீஸார், எசனை பகுதியில் சனிக்கிழமை திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எசனை வடக்குமாதவி சாலையைச் சேர்ந்த சந்திரகுமார் மகன் பூவரசனை (22) பிடித்து விசாரணை மேற்கொண்டதில், கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் 1 கிலோ 150 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.