மணல் கடத்தலில் ஈடுபட்ட இரு லாரிகள் பறிமுதல்: 4 பேர் கைது
மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து, 2 லாரிகளையும் பெரம்பலூர் போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பில், ஆய்வாளர் அழகேசன் தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியலூரிலிருந்து வந்த டாரஸ் லாரியை வழிமறித்து சோதனையிட்டதில், அனுமதியின்றி மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம், திக்குருச்சியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் விஜில் (27), விளாங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜோதி மகன் ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், மணல் ஏற்றிவந்த டாரஸ் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல, சனிக்கிழமை காலை மணல் ஏற்றிவந்த லாரியை வழிமறித்து சோதனையிட்டதில் அனுமதியின்றி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, லாரி ஓட்டுநர் கன்னியாகுமரி மாவட்டம், விளாங்கோடு பகுதியைச் சேர்ந்த செல்வமணி மகன் மகாலிங்கம் (37), லாரி உதவியாளர் திக்குருச்சியைச் சேர்ந்த தாமஸ் மகன் அஜீத் (29) ஆகியோரை கைது செய்து, டாரஸ் லாரியையும் பறிமுதல் செய்தனர். பின்னர், மேற்கண்ட 4 பேரையும் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.