பெரம்பலூர் அருகே சனிக்கிழமை மாடி வீடு இடிந்து விழுந்து இரண்டு பெண்கள் காயமடைந்தனர்.
பெரம்பலூர் ஒன்றியத்துக்குள்பட்ட எசனை கீழக்கரை பகுதியைச் சேர்ந்த மாச்சாப்பு மனைவி பாப்பாத்தி (55), இவரது சகோதரியான வேலு மனைவி வள்ளியம்மை (60). இருவரும் சலவைத் தொழிலாளிகள். இந்நிலையில், சனிக்கிழமை காலை துணிகளை துவைத்து உலர வைப்பதற்காக பாப்பாத்தியும், வள்ளியம்மையும் மொட்டி மாடிக்குச் சென்றனர். அப்போது, திடீரென மொட்டை மாடி உடைந்து கீழே சரிந்தது. இதில், மேற்கண்ட இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் மொட்டை மாடியில் தண்ணீர் தேங்கிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.