மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், சீமான் ஆகியோர் பட்டியல் இன மக்களின் விரோதிகள் என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச். ராஜா.
பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேச ஒற்றுமை பிரசாரம் என்னும் தலைப்பில் அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கம் குறித்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
காஷ்மீர், ஜம்மு, லடாக் ஆகிய பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் 370 சட்டப்பிரிவு நீக்கத்தை வரவேற்கிறார்கள். ஆனால், மு.க. ஸ்டாலின், வைகோ, ராகுல், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் இதை எதிர்க்கிறார்கள்.
தேசிய ஒருமைப்பாட்டை விரும்புகிறவர்கள் இதை ஆதரிக்கிறார்கள். நாடு முழுவதும் 370 கூட்டங்கள் நடத்தப்பட்டு, 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்து விளக்கி கூறுகிறோம்.
இதற்கு, மக்கள் மத்தியிலும், மக்களவை, மாநிலங்களவையில் ஆதரவு உள்ளது. மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், சீமான் ஆகியோர் பட்டியல் சமுதாய மக்களின் விரோதிகள் என்ற விவரம் கிராமம்தோறும் சென்றடைய வேண்டும்.
மத்திய அரசு சார்பில், காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது.
காஷ்மீரை விட்டு இந்தியா வெளியேற வேண்டும் எனக் கூறும் திருமாவளவன், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றார் ஹெச். ராஜா.
மாவட்டத் தலைவர் சாமி. இளங்கோவன் தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் சி. சந்திரசேகர், மாவட்ட பொதுசெயலர் சாமிநாதன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலர் அடைக்கலராஜ், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கோட்டப் பொறுப்பாளர் எம். சிவசுப்ரமணியம், மாவட்ட செயலர்கள் குரு. ராஜேஸ், முத்தமிழ்ச்செல்வன், நகர தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, கலை இலக்கிய பிரிவு மாவட்டத் தலைவர் சேகர் வரவேற்றார். பொருளாதார பிரிவு மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.