பிரதம மந்திரியின் கௌரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 54,600 விவசாயிகள் பிழை திருத்தம் மேற்கொள்ள, அவர்களது செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் க. கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகள் கெளரவ ஊக்கத்தொகை திட்டத்தில், மத்திய அரசின் மூலமாக ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம், மூன்று தவணைகளாக 4 மாதத்துக்கு ஒருமுறை தலா ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில், 66,024 விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ. 13.20 கோடி, இரண்டாம் தவணையாக 55,986 விவசாயிகளுக்கு ரூ. 11.19 கோடி, மூன்றாவது தவணையாக 12,378 விவசாயிகளுக்கு ரூ. 2.47 கோடி என மொத்தம் இதுவரை ரூ. 26.87 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பதிவுசெய்து பயனடைந்த விவசாயிகள் மீண்டும் தவணை ஊக்கத்தொகை பெறுவதற்கு, ஆதார் அட்டையில் எவ்வாறு அவரது பெயர் உள்ளதோ, அதேபோல இத்திட்டத்திலும் பதிவு செய்ய வேண்டும். இதற்காக பதிவு செய்யப்பட்ட விவசாயி பெயரும், ஆதார் அட்டையில் உள்ள பெயரும் மாறுதலாக இருக்கும் பட்சத்தில், விவசாயிகளின் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசிக்கு மத்திய அரசு மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 54,600 விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இத்திருத்தம் மேற்கொள்வதற்காக விவசாயிகள் இணையதள முகவரியில் தங்களது பெயரை திருத்தம் செய்துகொள்ளலாம் அல்லது அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள், வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அலுவலகத்தில் திருத்தம் செய்துகொள்ளலாம்.