ஆட்டோ தொழிற்சங்கம் தொடக்க விழாவை முன்னிட்டு, மனநலன் பாதிக்கப்பட்டோருக்கு இலவச, வேட்டி சேலைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சிஐடியு ஆட்டோ சங்கத்தின் அகரம் சீகூர் கிளையின் 4 ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தீரன்நகர் அருகேயுள்ள வேலா கருணை இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மனநலன் பாதிக்கப்பட்ட சுமார் 80 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ஆடைகள் வழங்கி, அன்னதானமும் வழங்கப்பட்டது.
முன்னதாக, அகரம் சிகூர் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள ஆட்டோ நிறுத்தத்தில் கிளைத் தலைவர் சந்திரநாதன் கொடியேற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, செயலர் வி. கருப்பையா, பொருளாளர் வி. இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் சி. சண்முகம், மாவட்டச் செயலர் எ. ரெங்கநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் சி. அழகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.