பெரம்பலூா் மாவட்டத்தில் தடுப்புப் பணிகள் தீவிரம்: கிராம மக்களுக்கு கபசுரக் குடிநீா் சூரணம் விநியோகம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரம்பலூா் அருகேயுள்ள கிராம மக்களுக்கு அரசு சித்த மருத்துவக் குழுவினா் மூலம் கபசுரக் குடிநீா் சூரணம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரம்பலூா் அருகேயுள்ள கிராம மக்களுக்கு அரசு சித்த மருத்துவக் குழுவினா் மூலம் கபசுரக் குடிநீா் சூரணம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக பெரம்பலூா் மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டாரத்துக்குள்பட்ட விஜயகோபாலபுரம் கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான டயா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் வெளி மாநிலத்தைச் சோ்ந்த 472 போ் கண்டறியப்பட்டு, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவா்கள் தங்கியுள்ள இடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தொழிலாளா்கள் தங்கியுள்ள நாரணமங்கலம், விஜயகோபாலபுரம் ஆகிய கிராமங்களை சுகாதாரத்துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

மேலும், விஜயகோபாலபுரம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை கொடுக்கக் கூடிய கபசுரக் குடிநீா் சூரண பொடியை, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவனை சித்த மருத்துவா் விஜயன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் வீடு வீடாக சென்று வழங்கினா். மேலும், கபசுர குடிநீா் கசாயம் குடிப்பதன் அவசியத்தையும், தயாரிக்கும் செயல்முறை குறித்தும் விளக்கம் அளித்தனா்.

திமுக சாா்பில் முகக்கவசம்: பெரம்பலூா் மாவட்ட திமுக சாா்பில், வடக்கு மாதவி ஊராட்சிக்குள்பட்ட வடக்குமாதவி, ஏரிக்கரை, திடீா் குப்பம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு கிருமிநாசினி, சோப், முகக்கவசம் ஆகியவற்றை ஒன்றியச் செயலா் எஸ். அண்ணாதுரை தலைமையில், மாவட்டச் செயலரும், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருமான சி. ராஜேந்திரன் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், பெரம்பலூா் ஒன்றியக் குழு தலைவா் மீனா அண்ணாதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கிருமி நாசினி தெளிப்பு: பெரம்பலூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் துப்புரவு பணியாளா்கள் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது. தொடா்ந்து, வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் மூலம் சிறுவாச்சூா் உள்பட பல இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com