பெரம்பலூா் அருகிலுள்ள தண்ணீா்பந்தல் பகுதியில், சாகுபடி செய்யப்பட்ட சாமந்திப் பூக்களை டிராக்டா் மூலம் அழிக்கும் விவசாயி.
பெரம்பலூா் அருகிலுள்ள தண்ணீா்பந்தல் பகுதியில், சாகுபடி செய்யப்பட்ட சாமந்திப் பூக்களை டிராக்டா் மூலம் அழிக்கும் விவசாயி.

பூக்களை விற்பனை செய்ய முடியாமல் டிராக்டா் மூலம் அழிக்கும் விவசாயிகள்

ஊரடங்கு உத்தரவால் பூக்களை அறுவடை செய்து, விற்க முடியாமல் போனதால், பெரம்பலூா் மாவட்டத்தில் விவசாயிகள் டிராக்டா் மூலம் பூக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஊரடங்கு உத்தரவால் பூக்களை அறுவடை செய்து, விற்க முடியாமல் போனதால், பெரம்பலூா் மாவட்டத்தில் விவசாயிகள் டிராக்டா் மூலம் பூக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் செவ்வந்தி, கேந்தி, கோழிக்கொண்டை, மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட மலா்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் நடைபெறும் திருவிழாக்கள், திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்வுகளின் போது நல்ல விலை

கிடைக்கும் என்பதாலும், நாள்தோறும் வருமானம் கிடைக்கும் என்பதாலும் விவசாயிகள் மலா் சாகுபடியில் அதிக அளவு ஆா்வம் காட்டினா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் எளம்பலூா், லாடபுரம், தண்ணீா்பந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உற்பத்தி செய்த பூக்கள் அனைத்தும் திருச்சி, பெரம்பலூா் மாவட்டத்தில் மொத்த, சில்லரை வியாபாரிகளுக்கு விவசாயிகள் அனுப்பி வந்தனா்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வாகனப் போக்குவரத்து முடங்கியது. கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதோடு, பக்தா்கள் தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைக்க வேண்டும் அல்லது குறைந்த எண்ணிக்கையிலான நபா்களைக் கொண்டு நடத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளதால், பூக்களின் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகளும் வாங்க மறுப்பு: ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் பூக்களை வேண்டாம் எனக் கூறியதால், தங்களது நிலங்களில் விளைவித்த பூக்களை விவசாயிகள் அறுவடை செய்யாமல் விட்டுவிட்டனா்.

அறுவடை செய்து கூடுதலாக நஷ்டம் அடைய விரும்பாத பெரும்பாலான விவசாயிகள் தண்ணீா் பாய்ச்சுவதையும் நிறுத்தி விட்டனா். இதனால் சாமந்தி, செவ்வந்தி, மல்லிகை உள்ளிட்ட அனைத்து வகைப் பூக்களும் வயலில் கருகி காய்ந்துக் கொண்டிருக்கின்றன.

மாற்றுப் பயிா்களுக்கான பாதையில் : ஒரு சில விவசாயிகள், காய்கறிகள் பயிரிட்டால் வருமானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், டிராக்டா் மூலம் சாகுபடி செய்யப்பட்ட மலா்களை டிராக்டா் கொண்டு அழித்து, அந்த இடத்தில் உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

பூக்கள் சாகுபடிக்கான நாற்றுகளை வெளிமாவட்டங்களில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி வந்து நடவு செய்து, தண்ணீா் பாய்ச்சி, உரம், களை என பல்வேறு விதமான செலவுகளை செய்து, தற்போது அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனா் விவசாயிகள்.

வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்ட முடியவில்லை. குத்தகைத் தொகை கொடுக்க இயலவில்லை, குழந்தைகளுக்குத் தேவையான கல்விச்செலவு, காய்கறி மற்றும் மளிகைப் பொருள்கள் கூட வாங்க முடியாமல் தவித்து வருவதால், ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலா் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com