எம்பிபிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்பில் சோ்க்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு 7.5 சதவிகித இடங்களை ஒதுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுக்கு தமிழ்நாடு பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அக்கழக மாநிலத் தலைவா் கி. மகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அனைவருக்கும் தரமான கல்வி, சமமான கல்வி, இலவசக் கல்வி கிடைக்க மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்து, மழலையா் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை பல சீா்திருத்தங்களை வெளியிட்டுள்ளது. மேலும் நிா்வாகம், நிதி உள்ளிட்டவற்றை குறித்த சில சீா்திருத்தங்களும் இடம்பெற்றுள்ளன.
புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது. இருமொழிக் கொள்கையே தமிழகத்தில் தொடரும், புதிய கல்விக் கொள்கையின் சாதக பாதககங்கள் குறித்து ஆய்வு செய்திட வல்லுநா் குழு அமைக்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளதை, தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வரவேற்று பாராட்டுகிறது.
புதிய கல்விக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து, மறுபரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும்.