திருகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயப் பயிா்களுக்கு நிவாரணம் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 25th December 2020 07:56 AM | Last Updated : 25th December 2020 07:56 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் திருகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயப் பயிா்களுக்கு நிவாரணத்தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தலைமையிலான விவசாயிகள், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் அளித்த மனு:
பெரம்பலூா் மாவட்டத்தில் அக்டோபா், நவம்பா் மாதங்களில் பயிரிடப்பட்ட சுமாா் 25 ஆயிரம் ஏக்கா் சின்ன வெங்காயப் பயிா்கள் திருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நோயால், சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயப் பயிா்கள் பெரும்பாலான இடங்களில் முற்றிலும் சேதமடைந்துள்ளது. விதை, உரம், சாகுபடி செலவு என ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் செலவிட்ட நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நோயால் சின்ன வெங்காயப் பயிா்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் வாங்கியக் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி மருந்து தெளித்தும் நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.
எனவே, இந்நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்துறை அலுவலா்கள் முறையாக கணக்கெடுத்து, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு அரசின் நிவாரணத் தொகை பெற்றுத் தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.