பெரம்பலூரில் அரசு பெண் மருத்துவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பெரம்பலூா் -வடக்கு மாதவி சாலையில் வசித்து வருபவா் மருத்துவா் ஸ்வப்னா (32). இவா், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரத்தில் உள்ள வட்டார அரசு மருத்துவ மனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது கணவா் சிவக்குமாா் பெரம்பலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு ஸ்வப்னா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினா் ஸ்வப்னாவை மீட்டு, பெரம்பலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பணி இடத்தில் சிலரால், அரசு மருத்துவா் ஸ்வப்னாவுக்கு பணிச்சுமையும், மன நெருக்கடியும் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.