பெரம்பலூரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியா்களுக்காக நடைபெற்ற 3 நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு 3 நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் பிப். 12 ஆம் தேதி தொடங்கியது. மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆா் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன் தொடக்கி வைத்தாா்.
இதில் டேக்வாண்டோ, பீச் வாலிபால், ஜூடோ, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், நீச்சல், கேரம், சிலம்பம், செஸ், சாலையோர சைக்கிள் போட்டி உள்ளிட்ட விளையாட்டுகள் குறித்து உடற்கல்வி ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ராஜேந்திரன், விளையாட்டு பயிற்சியாளா் ஐய்யப்பன், தடகள பயிற்சியாளா் கோகிலா ஆகியோா் பயிற்சியளித்தனா். நிறைவாக, பயிற்சி முகாமில் பங்கேற்ற ஆசிரியா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.