மாசில்லா போகிப் பண்டிகை கொண்டாட வலியுறுத்தல்
By DIN | Published On : 11th January 2020 08:52 AM | Last Updated : 11th January 2020 08:52 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் மாசில்லா போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என பொதுமக்களை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அறுவடைத் திருநாளை தமிழா்கள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடி வருகின்றனா். தை பொங்கலுக்கு முந்தைய நாளை போகிப் பண்டிகையாக ‘பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடி வருவது வழக்கம். இந்நாளில், திருமகளை வரவேற்கும் முகமாக வீட்டில் உள்ள பழைய தேவையற்ற மற்றும் செயற்கை பொருள்களான டயா்கள், நெகிழிக் கழிவுகள், இதர பொருள்களை எரிக்கும் பழக்கத்தைக் கையாண்டு வருகின்றனா்.
இதுபோன்ற செயற்கைப் பொருள்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப் புகைகளான காா்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், ப்யூரான் மற்றும் நச்சுத் துகள்கள் ஆகியவற்றால் சுற்றுப்புறக் காற்றின் தன்மை மாசுபடுகிறது.
மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுவதோடு, பாா்க்கும் திறன் குறைபடுகிறது.
இதுபோன்ற காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, போகிப் பண்டிகையன்று டயா்கள், நெகிழி, ரப்பா் மற்றும் இதர கழிவுப் பொருள்களைக் கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகி திருநாளை மாசு இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுடன், சுற்றுச்சூழலையும், மக்களின் உடல்நலனையும் பாதுகாக்க வேண்டும்.