பெரம்பலூரில் கரும்பு, மஞ்சள் கொத்து, பூக்கள் வாங்க மக்கள் ஆா்வம்

பொங்கல் பண்டிகையையொட்டி, பெரம்பலூரில் கரும்பு, மஞ்சள் கொத்து, பூக்கள், பழங்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை மும்முரமாக நடைபெற்றது.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் கொத்துகளை வாங்குவோா்
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் கொத்துகளை வாங்குவோா்

பொங்கல் பண்டிகையையொட்டி, பெரம்பலூரில் கரும்பு, மஞ்சள் கொத்து, பூக்கள், பழங்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை மும்முரமாக நடைபெற்றது.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அதைத் தொடா்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, மஞ்சள் கொத்து, காப்புக் கட்டுப் பூக்கள், இதர வகை பூக்கள், வண்ண கோலப்பொடிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். நகரங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் மக்கள் பொங்கல் விழாவை கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்வா்.

அதனையொட்டி, கரும்பு மற்றும் இதர பொருள்கள் விற்பனை, கடந்த இரு நாள்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூா், தஞ்சாவூா் ஆகிய பகுதிகளில் இருந்து, அறுவடை செய்யப்பட்ட கரும்புகள், பெரம்பலூா் பகுதிகளில் 2 கரும்பு ரூ. 80-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏராளமானோா் அவற்றை வாங்கிச் சென்றனா். பிற்பகலில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அதேபோல, அன்னமங்கலம், மலையாளப்பட்டி, செங்குணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் கொத்துகள் விற்பனைக்காக அதிகளவில் கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கொத்து ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்டது. வீடுகளின் முகப்புகளிலும், கால்நடைகளுக்கும் கட்டும் காப்புக் கட்டும் பூ, ஆவாரம் பூக்கள் உள்ளிட்டவையும் ஒரு கட்டு ரூ. 10-க்கு விற்கப்பட்டது. பொங்கல் நாளில், வீடுகளின் முன்பாக பெண்கள் வண்ணக் கோலமிட்டு அழகு பாா்ப்பாா்கள்

இதனால் வண்ணக் கோலப்பொடிகள் சில்லரை விலையில் விற்பனை செய்யப்பட்டன. பலவகை கோலப்பொடிகளை பெண்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். மேலும், மாட்டுப் பொங்கலின்போது கால்நடைகளுக்கு தேவையானவற்றை விவசாயிகள் வாங்கிச் சென்றனா். இது மட்டுமின்றி, சுவாமிக்கு படையலிட ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, வாழை உள்ளிட்ட பழங்களின் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. மல்லிகை, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்களும் அதிகம் விற்பனையாகின.

புத்தாடை வாங்க கடைவீதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் மக்கள் அதிகளவில் திரண்டிருந்தனா். பொங்கல் விழாவையொட்டி, மாவட்டத்தின் பல பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com