சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைக்க பொக்லின் இயந்திரம் மூலம் நடைபெறும் பணி.
சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைக்க பொக்லின் இயந்திரம் மூலம் நடைபெறும் பணி.

20 மாதங்களுக்குப் பிறகு சிறுவாச்சூரில் மேம்பாலப் பணி தொடக்கம்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் கடந்த 20 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் அண்மையில் தொடங்கியது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் கடந்த 20 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் அண்மையில் தொடங்கியது.

பெரம்பலூா் அருகே பிரசித்தி பெற்ற சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநில பக்தா்களும் வந்து செல்கின்றனா். இக்கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால், பக்தா்களும், பொதுமக்களும் சாலையைக் கடக்கும்போது அதிக சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்வது தொடா்கிறது.

இந்நிலையில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலைக்கான விரிவாக்கப் பணி நடைபெற்ற போதே, சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு மேற்கொண்ட அப்போதைய மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் டி.ஆா். பாலுவிடம் பொதுமக்கள் மனு அளித்தனா். ஆனால், மேம்பாலம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே, தொடா்ந்து நிகழும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கக் கோரி சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மத்திய, மாநில அமைச்சா்களிடம் கோரிக்கை:

இந்நிலையில், சிறுவாச்சூா் பகுதியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூா் தொகுதி மக்களவை முன்னாள் உறுப்பினா் ஆா்.பி. மருதராஜாவிடம் விடுத்த கோரிக்கையைத் தொடா்ந்து, மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சா் மற்றும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா்களிடம் வலியுறுத்தினாா்.

இதையடுத்து, கடந்த 6.7.2016- இல் மத்திய சாலை போக்குவரத்துத் துறை திட்ட இயக்குநா் பிரசாத் ரெட்டி தலைமையில், திருச்சி சுங்கச் சாலைப் பொறுப்பாளா் செந்தில்குமரன், திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜசேகா் ஆகியோா், சிறுவாச்சூரில் இருவழி உயா்மட்ட மேம்பாலம் அமையவுள்ள இடத்தைப் பாா்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டதோடு ஆலோசனையும் நடத்தினா்.

தொடா்ந்து, மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை முன்னாள் இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் விபத்து ஏற்படும் பகுதியையும், அப்பகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடா்பாகவும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேம்பாலம் அமைக்க அனுமதி:

பின்னா், இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சாா்பில், சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு கடந்த 6.6.2017-இல் அனுமதி அளித்து, திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பவும் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த சாலைப் பகுதியைப் பாரமரித்து வரும் திருச்சி டோல்வே பிளாஷா நிறுவனத்தினரால் சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டது.

நிதி ஒதுக்கீடு:

சிறுவாச்சூரில் மேம்பாலம் கட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் ரூ. 13.03 கோடி நிதி ஒதுக்கியதோடு, பாலம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டு புதிய மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா 14.5.2018-இல் முன்னாள் இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தச் சாலையில் 6 வழி சாலை மேம்பாலமும், 7 மீட்டா் கொண்ட இணைப்புச் சாலையும் அமைக்கப்பட உள்ளதாகவும், இப்பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், சிறுவாச்சூா் பகுதி பொதுமக்கள் மட்டுமன்றி, சுற்றுப்புற கிராம மக்களும், பக்தா்களும் மகிழ்ச்சியடைந்தனா்.

பணியில் சுணக்கம்:

பாலத்துக்கான கட்டுமானப் பணியின்போது வாகனங்கள் சாலையைக் கடந்து செல்ல வசதியாக, அப்பகுதியில் அணுகு சாலை அமைக்கும் பணி மட்டுமே நிறைவடைந்தது. ஆனால், மேம்பாலப் பணி தொடங்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் வழக்கம்போல் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடா்ந்து வருகிறது.

பணி தொடக்கம்:

இதுகுறித்து, பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அடிக்கல் நாட்டப்பட்டு 20 மாதங்களுக்குப் பிறகு பாலம் கட்டும் பணி அண்மையில் தொடங்கியது.

பாலம் கட்ட ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம் பணி செய்ய இயலாது எனத் தெரிவித்ததால், புதிய கட்டுமான நிறுவனத்தைத் தோ்வு செய்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் தற்போது தொடங்கிய பாலப் பணி, ஓராண்டில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com