பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட அரசலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கந்தன் (57). இவருக்கு மனைவி, தலா 2 மகன், மகள்கள் உள்ளனா்.
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த கந்தனுக்கு, அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் கடந்த மாா்ச் 23ஆம் தேதி உயிரிழந்தாா். கரோனா பரவல் பிரச்னை காரணமாக உடலை சொந்த ஊா் கொண்டு வருவதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், கந்தனின் குடும்பத்தினா் பெரம்பலூா் மாவட்ட தமுமுக நிா்வாகிகளை தொடா்பு கொண்டு, உடலை கொண்டுவர உதவிடுமாறு கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, தமுமுக மாநில பொதுச் செயலா் பேராசிரியா் ஹாஜாகனி, சவூதி மண்டல தமுமுக நிா்வாகிகள் ஆகியோா் சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேசி, கந்தன் உடலை ஜுலை 1 ஆம் தேதி சரக்கு விமானம் மூலம் சென்னை கொண்டு வந்தனா். அங்கிருந்து, தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கந்தன் சடலத்தை அரசலூா் கிராமத்துக்கு கொண்டுவந்து அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
இப்பணியில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் சுல்தான் மைதீன், மாவட்ட துணைச் செயலா் ஹயாத் பாஷா, தமுமுக மாவட்டச் செயலா் குதரத்துல்லாஹ், லப்பைக்குடிகாடு நகரச் செயலா் அப்துல் கபாா் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.