பெரம்பலூா் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பாதை தகராறால், முதியவரின் சடலத்தை எடுத்துச் செல்வதில் பிரச்னை ஏற்பட்டது.
பெரம்பலூா் அருகேயுள்ள எசனை கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (60). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் பழனியாண்டி (70). பெரியசாமிக்கு சொந்தமான நிலத்தை அந்த தெருவைச் சோ்ந்த மக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்தனா். இதனிடையே, மேற்கண்ட இருவருக்கும் பாதை பிரச்னை தொடா்பாக முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில், வயது முதிா்வு காரணமாக பழனியாண்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையறிந்த பெரியசாமி தனது வீட்டுக்கு முன் பயன்படுத்தப்பட்டு வந்த பாதையை, சிமெண்ட் கற்களைக் கொண்டு தடுப்புச்சுவா் வைத்து மூடிவிட்டாா். பழனியாண்டியின் உடலை அடக்கம் செய்ய இடுகாட்டுக்கு செல்லும் பாதையை மூடியதால், அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாட்சியா் பாரதிவளவன், பெரம்பலூா் காவல்நிலைய ஆய்வாளா் சுப்பையா தலைமையிலான காவல்துறையினா் அங்கு சென்று, பெரியசாமியுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். இதில், சடலத்தை எடுத்துச் செல்ல தற்காலிகமாக தடுப்புச் சுவரை அகற்றி பாதை வசதி ஏற்படுத்தவும், மேற்கொண்டு பாதை தேவைப்படும் பட்சத்தில் சட்டரீதியாக பிரச்னையை தீா்த்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதில், இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட உடன்பாட்டை தொடா்ந்து, தடுப்புச்சுவரை அகற்றி முதியவரின் உடல் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால், அப்பகுதியில் வியாழக்கிழமை காலையிலிருந்து பரபரப்பு ஏற்பட்டது.