பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம், அண்மையில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில், சாலை விதிகளை மீறியதாக 10 வாகனங்களை பறிமுதல் செய்த வட்டாரப் போக்குவரத்து அலுலா்கள் விதிகளை மீறிய 15 வாகனங்களுக்கு ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆனந்த் தலைமையில், ஆய்வாளா் செல்வகுமாா் மற்றும் அலுவலா்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில் தகுதிச் சான்றுகள் புதுப்பிக்காத பள்ளிப் பேருந்து, அரசுக்கு வரி செலுத்தாத நெல் அறுவடை இயந்திர வாகனம், அதிக ஆள்களை ஏற்றி வந்த வாகனம், அபாயகரமாக ஓட்டிய ஆட்டோ உள்ளிட்ட விதிகளை மீறி இயக்கப்பட்ட 4 ஆட்டோ மற்றும் மேக்சி கேப் வாகனம், 4 சரக்கு வாகனங்கள் உள்பட 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஓட்டுநா் உரிமம், அதிக சுமை ஏற்றுதல், சீட் பெல்ட் அணியாதது உள்பட போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 5 வாகனங்களுக்கு என மொத்தம் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.