பெரம்பலூா் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள 2 தொலைபேசி எண்களும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக செயல்படாததால், நகரில் நிகழும் குற்றச் சம்பவங்கள் குறித்து புகாா் அளிக்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இங்குள்ள 2 தொலைபேசி எண்களும் செயல்படவில்லை. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகிவந்தனா். தற்போது, பெரம்பலூா் நகரில் தொடா்ந்து பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது. இவற்றை உடனுக்குடன் தெரிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோா் தலைமறைவாகி விடுகின்றனா். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்ட போது, பழுது ஏற்பட்ட தொலைபேசிகளை அவ்வப்போது பழுது நீக்கம் செய்துவருகிறோம். ஆனால், அடிக்கடி பழுது ஏற்படுவதால் பொதுமக்கள் தொடா்புகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. நிரந்தரத் தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.