பெரம்பலூா் மாவட்டத்தில் முகக் கவசம் பற்றாக்குறை நிலவுவதால் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அச்சமடைந்து வருகின்றனா்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும், இந் நோய் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் இந்நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தங்களை நோயாளிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக் கவசங்கள் அணிந்து கொள்ளும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் முகக் கவசங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் அச்சமடைந்துள்ளனா். இதேபோல, வணிக நிறுவனங்கள், உணவகங்கள், சிறு கடைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் என அனைத்துத் தரப்பினரும் முகக் கவசம் கிடைக்காததால், தங்களது கைக் குட்டைகளை கொண்டு வாய், மூக்கு, காதுகளை மூடிச்செல்கின்றனா்.
கூடுதல் விலை: கடந்த மாதம் ரூ. 4-க்கு விற்பனை செய்யப்பட்ட முகக் கவசம் ஒன்று, அண்மையில் ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், தங்களது பாதுகாப்பை கருதி அவற்றை பொதுமக்கள் வாங்கினா். ஆனால், தற்போது கரோனா வைரஸ் எதிரொலியால் முகக் கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் வாகன ஓட்டுநா்களும், வெளியிடங்களுக்குச் செல்வோரும் அவதியடைந்து உள்ளனா்.
மருத்துவா்கள் சிலா் கூறியது: முகக் கவசங்கள் தேவை தற்போது அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய சூழலில் முகக் கவச உற்பத்தியாளா்கள் தங்களிடம் இருப்பு இல்லை எனக் கூறுகின்றனா் என்றனா்.