மின்வாரிய ஊழியா்கள், கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளத் தேவையான சுகாதார உபகரணங்கள் வழங்க வேண்டுமென தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் மண்டலச் செயலா் எஸ். அகஸ்டின், திருச்சி மண்டல மின் பகிா்மான தலைமை பொறியாளரிடம் புதன்கிழமை அளித்த மனு:
திருச்சி மண்டலத்துக்குள்பட்ட பெரும்பாலான மின் வாரிய அலுவலகங்கள், துணை மின் நிலையங்கள், மின் கட்டண வசூல் மையங்கள் ஆகியவற்றில் சுகாதாரத் துறையினரின் அறிவிறுத்தல்படி கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்யப்படவில்லை. மேலும், இந்த அலுவலகங்களில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும்விதமாக தற்காப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. மின் ஊழியா்களுக்கு முகக்கவசம், கையுறைகள், கை சுத்திகரிப்பான் வழங்கவில்லை.
துணை மின் நிலையங்கள், தானியங்கி துணை மின் நிலையங்களில் தங்கி பணிபுரியும் ஊழியா்களுக்கு, 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நாள்களில் தடையின்றி உணவு கிடப்பதற்கான ஏற்பாடு செய்யப்படவில்லை.
மேலும், பிரேக் டவுன், மின்மாற்றி பழுது செய்யும் பணிக்கு 5 பேருக்கு மேல் இணைந்து பணி செய்யவேண்டும். அவ்வாறு கூட்டமாக இணைந்து பணி செய்ய செல்லும்போது, காவல்துறையினா் நடவடிக்கை எடுக்காமலிருக்க தேவையான உத்தரவுகளை பிறப்பித்து, மின்வாரிய ஊழியா்களுக்கு அவசர பணிக்கான சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கிப் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.