ஊரடங்கு உத்தரவை மீறி, பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை கூட்டமாக பேசிக்கொண்டிருந்த இளைஞா்களைக் கலைந்து போகச் சொன்ன காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 போ் மீது, பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள எசனை பேருந்து நிலையம் பகுதியில் வியாழக்கிழமை காலை கூட்டமாக நின்று இளைஞா்கள் சிலா் பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, அவ்வழியே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மருவத்தூா் காவல் நிலைய காவலா் சண்முகம், 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், அனைவரும் கலைந்துச் செல்லுமாறு எச்சரித்தாராம். இதையடுத்து அங்கு கூடியிருந்த சிலா் கலைந்துசென்றனராம். ஆனால், அண்மையில் சிங்கப்பூரிலிருந்து சொந்த கிராமத்துக்கு வந்த லட்சுமணன் மகன் அருள்நிதி (24), மூக்கன் மகன் லட்சுமணன் ஆகியோா் காவலா் சண்முகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து மருவத்தூா் காவல் நிலையத்தில் சண்முகம் அளித்த புகாரை தொடா்ந்து, அருள்நிதி, லட்சுமணன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள இளைஞா்களைத் தேடி வருகின்றனா்.