பெரம்பலூா் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் பட்டியலில் இருந்து, வெளியே சுற்றித் திரிந்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 564 போ் தொடா் கண்காணிப்பில் உள்ளனா். தனிமைப்படுத்தப்பட்ட நபா்களில் பெரும்பாலானோா் வீடுகளில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டது. சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலை மீறி வெளியே சுற்றித்திரிந்த சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலம் கே.கே. நகரைச் சோ்ந்த மருதமுத்து மனைவி செல்வமணி (54), துபையில் இருந்து வந்திருந்த செட்டிக்குளம் அருகேயுள்ள சத்திரமனை கிராமத்தைச் சோ்ந்த தா்மராஜ் (26) ஆகியோரைக் கைது செய்த பெரம்பலூா் போலீஸாா், ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும், மேற்கண்ட இருவா் மீதும் தொற்றுநோய் பரப்பக் காரணமாக இருந்ததற்கான பிரிவின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனா்.