பெரம்பலூா்: பெரம்பலூா் நகரிலுள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்குவதற்காக, மேலும் ரூ. 2 லட்சத்தை அதிமுக மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.டி. ராமச்சந்திரன் திங்கள்கிழமை வழங்கினாா்.
ஊரடங்கால் உணவின்றி தவித்துவரும் ஏழை-எளிய மக்கள்,
ஆதரவற்றோா் பயன்பெறும் வகையில், பெரம்பலூா் பேருந்து நிலையம், அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களில் மே 3- ஆம் தேதி அதிமுக சாா்பில் இலவசமாக உணவு வழங்க ரூ.2 லட்சத்தை மாவட்டச் செயலரும், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.டி. ராமச்சந்திரன் வழங்கியிருந்தாா்.
தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால், மே 17 வரை இலவசமாக உணவு வழங்க நகராட்சி ஆணையா் எஸ். குமரிமன்னனிடம் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை ஆா்.டி. ராமச்சந்திரன் திங்கள்கிழமை வழங்கினாா்.
நிகழ்வின் போது நகரச் செயலா் இரா. ராஜபூபதி, ஒன்றியச் செயலா் சசிக்குமாா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் ஜி. பெருமாள் ஆகியோா் உடனிருந்தனா்.