பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கொட்டரையில் நீா்த்தேக்க கட்டுமானத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஆட்சியரகத்தை இரு கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.108 கோடியில் நீா்த்தேக்கம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமானப் பணிகளுக்காக 2012-ஆம் ஆண்டில் ஆதனூா், கொட்டரை உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இப்பணிகள் முடிந்து 8 ஆண்டுகளாகியும், கொட்டரை, ஆதனூா் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பலருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லையாம்.
விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டங்களிலும், ஆட்சியரிடமும் நேரில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த கொட்டரை, ஆதனூா் கிராமங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா், தங்களிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி ஆட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நீா்த்தேக்கக் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்துவோம் என முழக்கமிட்டனா்.
பின்னா் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனா்.