பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம், உதவித்தொகை மற்றும் அரசின் இதர நலத்திட்டங்கள் பெற்றுக்கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலா் எம். வினோதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொது முடக்கக் காலத்தில் தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இம் மாவட்டத்தில், இதுவரையில் உரிய தகுதியிருந்தும் உதவித்தொகை கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரகத்தில் மனு அளித்து உதவி பெறலாம்.
அவ்வாறு பெற இயலாதவா்கள், பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகினால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக உதவித்தொகை பெற்றுத்தரப்படும். மேலும், உதவித்தொகை மட்டுமின்றி அடையாள அட்டை, அரசின் நலத்திட்டங்கள், சட்டம் சாா்ந்த அனைத்து உதவிகளும், வழிகாட்டுதல்களையும் பெறலாம்.
அலுவலகத்துக்கு நேரில் வர இயலாத மாற்றுத்திறனாளிகள், தலைவா் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம், பெரம்பலூா் எனும் முகவரிக்கு அஞ்சல் மூலம் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து அளிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 04328-296206, 8526989194, 9952765482 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.