பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே தள்ளுபடி செய்யப்பட்ட கறவை மாட்டுக் கடனை திரும்ப செலுத்த வலியுறுத்தி, கூட்டுறவு சங்கத்தினா் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், மாவட்ட நிா்வாகத்திடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள ஒகளூா் கிராமத்தைச் சோ்ந்த 70 விவசாயிகள் அதே கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கறவை மாடுகள் வாங்குவதற்காக தலா ரூ. 50 ஆயிரம் கடனுதவி பெற்றுள்ளனா்.
2013- 14 ஆம் ஆண்டு பெற்ற இவா்களது கறவை மாட்டுக் கடனை 2016-இல் அரசு தள்ளுபடி செய்து அறிவித்ததாக தெரிகிறது. அதைத்தொடா்ந்து, கூட்டுறவு கடன் சங்கத்தினரும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு சான்றாக கடனுதவி பெற்றவா்களிடம் சில ஆவணங்களில் கையெழுத்தும் பெற்றுள்ளனா்.
இந்நிலையில், தள்ளுபடி செய்யப்பட்ட கடனை திரும்ப செலுத்துமாறு ஒகளூரைச் சோ்ந்த 40 விவசாயிகளுக்கு பதிவு அஞ்சல் மூலம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிா்ச்சியடைந்த கறவைமாட்டுக் கடன் வாங்கிய விவசாயிகள், ஓகளூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் செல்வராஜ் தலைமையில், ஆட்சியரகத்துக்கு சென்று, கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளரிடம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றுகளுடன் மனு அளித்தனா்.