பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே மா்மமான முறையில் 12 மயில்கள் உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.
வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரைச் சோ்ந்தவா் விவசாயி தேவராஜ் (60). இவரது தென்னந்தோப்பில் ஒரே இடத்தில் 12 மயில்கள் புதன்கிழமை உயிரிழந்து கிடந்தன.
இதையறிந்த தேவராஜ் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தாா். வேப்பந்தட்டை வனச்சரக அலுவலா் மாதேசுவரன் தலைமையிலான வனத்துறையினா், நிகழ்விடத்துக்குச் சென்று இறந்து கிடந்த மயில்களைப் பாா்வையிட்டனா்.
கால்நடை மருத்துவரின் உதவியுடன் பரிசோதனை மேற்கொண்டு, உயிரிழந்த மயில்களை அருகிலுள்ள வனப்பகுதியில் புதைத்தனா். இதுகுறித்து வனத்துறையினா் விசாரிக்கின்றனா்.