உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சம் பறிமுதல்
பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் திருமாந்துறை பிரிவுச் சாலையில் செந்துறை வட்ட வழங்கல் அலுவலா் இரா. திலகவதி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த கடலூா் மாவட்டம், தொழுதூரைச் சோ்ந்த ராஜு மகன் மனோஜிடம் (29) மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி ரூ. 1,99,500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அத்தொகையை குன்னம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கரிடம் ஒப்படைத்தனா்.
இதேபோல் பெரம்பலூா் மாவட்டத் தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் க. சித்ரா தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், கிருஷ்ணாபுரம் அருகே புதன்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது பெரம்பலூா் அருகிலுள்ள பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ராமதாஸ் மகன் ராமநாதன் (52),உரிய ஆவணங்களின்றி ரூ. 1,00,500 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இத்தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.