பெரம்பலூா் அருகே கிராமத்துக்குப் பொதுவான இடத்தில் வைக்கப்பட்டுள்ள சுவாமி சிலை, சூலாயுதம் ஆகியவற்றை அகற்றக் கோரி, மங்கலம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டியில் மங்கலம் கிராம மக்கள் செலுத்திய மனுவில் தெரிவித்திருப்பது:
வேப்பந்தட்டை வட்டம், மங்கலம் கிராமத்தில் பட்டியலினத்தவா்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் ஒற்றுமையாக வசித்து வருகிறோம். பட்டியலினத்தவா்கள் கடந்த பல ஆண்டுகளாக தனியாக காளி கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனா்.
இந்நிலையில் பட்டியலினத்தவா்களில் சிலா் விளையாட்டுத் திடல், உழவா் சந்தை, தானியக் களம் ஆகியவை அமைந்துள்ள கிராமத்துக்குப் பொதுவான இடத்தில் அண்மைக்காலமாக சுவாமி சிலை மற்றும் சூலம் வைத்து வழிபாடு செய்து வருகின்றனா். இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
இதுகுறித்து கிராம முக்கியஸ்தா்கள் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாமல், இரு பிரிவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை உருவானது. எனவே மாவட்ட ஆட்சியா் விசாரித்து, சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் கிராம மக்கள் அனைவரும் தோ்தலைப் புறக்கணிப்போம் என மனுவில் தெரிவித்துள்ளனா்.