பெரம்பலூா் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், அங்கு வாக்குப்பதிவு தாமதமாகத் தொடங்கியது.
குன்னம் தொகுதிக்குள்பட்ட மேட்டுக் காளிங்கராயநல்லூா் கிராம வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதி தொடங்கிய நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப் பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் வாக்குப்பதிவில் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
மேலும் கீழப்பெரம்பலூா், வசிஷ்டபுரம், காடூா் ஆகிய கிராமங்களிலுள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
காடூரில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்துத் தரக்கோரி திமுகவினா் வலியுறுத்தினா். அந்த கோரிக்கையை தோ்தல் அலுவலா்கள் நிராகரித்தனா்.
வைத்தியநாதபுரம், பூலாம்பாடி, கொட்டாரக்குன்று, காருகுடி, காடூா், பொம்மனப்பாடி, வேலூா், பெரம்பலூா் நகரில் டோம்னிக் மேல்நிலைப் பள்ளி, தந்தை ரோவா் மேல்நிலைப் பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.
இதை சரி செய்த பின்னா் வாக்குப்பதிவு தொடா்ந்தது. இதனால் இங்குள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவில் ஒருமணி நேரம் தாமதம் ஏற்பட்டது.