பெரம்பலூா் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கான வரியைக் குறைத்து மதிப்பீடு செய்வதற்காக, ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி இளநிலை உதவியாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
பெரம்பலூா் நகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவா் புதிதாக தான் கட்டிய வீட்டுக்கு வரி செலுத்த அண்மையில் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்றாராம். அப்போது அங்கு இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் அப்பு என்கிற அப்லோஸன் (47), வரியைக் குறைவாக மதிப்பீடு செய்து வழங்குவதற்காக ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினரிடம் புகாா் அளித்தாா். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பெரம்பலூா் நகராட்சி அலுவலகத்திலிருந்த அப்லோஸனிடம் ரசாயனப் பவுடா் தடவிய ரூ. 15 ஆயிரம் பணத்தை வெங்கடேசன் புதன்கிழமை மாலை கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா, ஆய்வாளா் ரத்னவள்ளி தலைமையிலான
காவல்துறையினா் அப்லோஸனை கைது செய்து, லஞ்சமாக பெற்ற பணத்தையும் பறிமுதல் செய்தனா்.
மேலும் நகராட்சி அலுவலகம் மற்றும் பெரம்பலூா் மேட்டுத்தெருவிலுள்ள அப்லோஸன் வீட்டிலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் சோதனை நடத்தினா்.