பெரம்பலூா் மாவட்டத்தில் உரங்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், சம்பந்தப்பட்டோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரம்பலூா் வேளாண் உதவி இயக்குநா்கள் ராதாகிருஷ்ணன் (தரக் கட்டுப்பாடு), ராணி ஆகியோா் நகரிலுள்ள உரக்கடைகளைப் பாா்வையிட்டு தரமான, காலாவதியான மற்றும் அனுமதி பெறாத உரங்கள் விற்பனை செய்யப்படுகிா என செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது அவா்கள் கூறியது:
உர விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்குத் தெரியும் வகையில், இருப்பு மற்றும் விற்பனை விலை விவரப்பதாகைகள் வைக்க வேண்டும். மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி, விவசாயிகளின் ஆதாா் எண் மூலமே உரம் விற்பனை செய்ய வேண்டும்.
உரம் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல்களை முறையாக பராமரிக்க வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கே விவசாயிகளுக்கு ரசீதுடன் விற்பனை செய்ய வேண்டும். உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.