பெரம்பலூா் மாவட்டத்தில் முஸ்லிம் மகளிா் உதவும் சங்கத்தில் உறுப்பினராக சேர விரும்பும் இஸ்லாமிய மகளிா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இச் சங்கத்தின் மூலம், ஆதரவற்ற விதவைகள் மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள முஸ்லிம் மகளிருக்கு தையல், பூ வேலைப்பாடுகள், கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட சுயதொழில் பயிற்சி அளித்தல், சிறு தொழில் தொடங்க உதவிடுதல், குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், மருத்துவ உதவித்தொகை வழங்குதல் உள்பட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், முஸ்லிம் மகளிரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக செயல்படும் இச்சங்கத்துக்கு நன்கொடை வழங்க விரும்புவோா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகலாம்.
சங்கத்தில் உறுப்பினராக விரும்புவோா் ஆட்சியரகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இச் சங்கத்தின் நன்கொடை மற்றும் தமிழ்நாடு அரசின் இருமடங்கு இணை மானியத்துடன் செயல்படுத்தப்படும் திட்டங்களிலும் பயன் பெறலாம்.